’டிக்டாக்’ உள்ளிட்ட சீனாவின் 52 செயலிகளை நீக்கும்படி தனது பிரிவினருக்கு உத்தரபிரதேசத்தின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்ஐடி)யின் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவற்றை கைப்பேசி மற்றும் கணினிகளில் இருந்து அவர்கள் குடும்பத்தாரும் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்த பின் சீனப் பொருட்களுக்கான எதிர்ப்பு நாடு முழுவதிலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் கைப்பேசிகளிலும், கணினிகளிலும் பயன்படுத்தப்படும் சீனாவைச் சேர்ந்த செயலிகளின் மூலம், இந்தியர்களை உளவு பார்க்கும் சூழலும் உருவாகி உள்ளது.இந்நிலையில், சீனாவின் 52 செயலிகளையும் பயன்படுத்த வேண்டாம் என உத்தரபிரதேச மாநில சிறப்பு அதிரடிப்படையினர் (எஸ்ஐடி) உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உத்தரபிரதேசத்தின் எஸ்ஐடி அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, “சீனாவின் செயலிகள் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களால் மத்திய அரசு அதிகாரப்பூர்வமான நடவடிக்கை எடுக்க முடியாமல் உள்ளது. இதன் மீதான கருத்துக்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாய்மொழி அனுமதி பெறப்பட்டு நம் பிரிவினருக்கு இந்த உத்தரவுஇடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
கைப்பேசி மற்றும் கணினிகளில் எந்த ஒரு செயலியையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, அவ்விரண்டில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டி இருக்கும். எனவே, உத்தரபிரதேசத்தின் எஸ்ஐடி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கருதப்படுகிறது. எஸ்ஐடியின் இந்த உத்தரவில் சீனாவின் செயலிகள் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரபலமாகி விட்ட டிக்டாக் செயலியும் இடம்பெற்றுள்ளது. மேலும் வால்ட் ஹைட், வீ சாட், விகோ வீடியோ, பிகோ லைவ், ஷேர் சாட், யுசி பிரவுசர், யுசி நியூஸ், பியூட்டி ப்ளஸ், எம்ஐ கம்யூனிட்டி, எம்ஐ ஸ்டீர்ஸ் உள்ளிட்ட 52 செயலிகள் பட்டியலிடப்பட்டு உள்ளன.
பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இந்த தடை உத்தரவுக்கு பச்சைக்கொடி காட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியின் பட்டாடைகள் நெசவுத் தொழிலிலும் சீன பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்க திட்டமிடப்படுகிறது. இங்குதயாராகும் பட்டுச் சேலைகளில் சீனாவின் பட்டு நூல்கள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.