இந்தியா

லடாக் தாக்குதல்; அனைத்துக் கட்சிக் கூட்டம்: பிரதமர் மோடி ஆலோசனை

செய்திப்பிரிவு

சீனாவுடன் மோதல் எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக 20 அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக, திமுக உட்பட 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதேசமயம் ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உட்பட நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவில் நடந்த விவகாரம் தொடர்பாகவும், இந்தியா தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். சீனாவின் தாக்குதல் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியிடம் தகவல்களை கேட்டனர்

SCROLL FOR NEXT