உலகம் முழுவதும் பல நாடுகளில் ரெம்டெசிவிர் மருந்தை,கரோனா பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றனர். அதன்படி இந்த மருந்து இந்திய சந்தைக்கு இந்த மாத இறுதியில் வரும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மருந்தை உற்பத்தி செய்து வரும் கைலீட் சயின்சஸ் நிறுவனம் கடந்த மே 29-ம் தேதி, இந்திய சந்தையில் மருந்தை இறக்குமதி செய்வதற்கு இந்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. இந்திய மருந்து ஒழுங்கு ஆணையம் இதற்கான ஒப்புதல்களை வழங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த 1-ம் தேதி இதற்கான ஒப்புதலை மருந்து ஒழுங்கு ஆணையம் வழங்கியது.
இதனிடையே இந்த மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய 6 நிறுவனங்கள் கைலீட் நிறுவனத்திடம் ஒப்புதல் கேட்டிருந்தன. தற்போது 5 நிறுவனங்களுக்கு கைலீட் சயின்சஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை தொடங்கி உள்ளன. இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் ரெம்டெசிவிர் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்த மருந்துகளை கரோனா பாதித்த அதிக சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள், 12 வயதுக்குஉட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்கள் ஆகியோருக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.-பிடிஐ