ஒடிசாவில் வங்கிக்கு கட்டிலுடன் இழுத்துச் செல்லப்படும் மூதாட்டி. 
இந்தியா

100 வயது மூதாட்டியை இழுத்துச் சென்ற விவகாரத்தில் வங்கி மேலாளர் சஸ்பெண்ட்

செய்திப்பிரிவு

ஒடிசாவின் நுவாபாரா மாவட்டம், பாராகான் கிராமத்தில் உத்கல் கிராம வங்கி உள்ளது. இங்கு ஜன்தன் வங்கிக் கணக்கில் பெண்களுக்கு மத்திய அரசால் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ பெறுவதற்காக, புஞ்சிமதி தேய் என்ற 60 வயது பெண் கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார். 100 வயதான தனது தாய் லாபே பாகல் படுத்த படுக்கையாக இருப்பதால் அவரது கணக்கில் செலுத்தப்பட்டுள்ள ரூ.1,500-ஐ தன்னிடம் தர வேண்டும் என கோரியுள்ளார். ஆனால் லாபே பாகல் நேரில் வந்தால்தான் பணம் தரமுடியும் என வங்கி மேலாளர் கண்டிப்புடன் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, மறுநாள், படுத்த படுக்கையாக இருந்த 100 வயது தாயை வங்கிக்கு புஞ்சிமதி தேய் கட்டிலுடன் தெருக்களில் இழுத்துச் சென்றார். இந்தக் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த வங்கியின் மேலாளர் அஜீத் பிரதான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அப்பெண்ணை துன்புறுத்தும் நோக்கம் வங்கி மேலாளருக்கு இல்லை. தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது. இதற்காக உத்கல் கிராம வங்கி வருந்துகிறது” என கூறப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT