ரேபன் கிராமத்தில் முகாமிட்டுள்ள பாதுகாப்பு படையினர் : படம் ஏஎன்ஐ 
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் என்கவுன்ட்டரில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

பிடிஐ

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடைேய நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று போலீஸார் தரப்பி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜம்மு காஷ்மீரின் தெற்குப்பகுதியில் உள்ள சோபியான் மாவட்டம், ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை மத்திய ரிசர்வ் படையின் 178 பட்டாலியன் பிரிவு, ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவு ஆகிய படைகள் இணைந்து தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் இறங்கினர். தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்று வளைத்ததால் உடனடியாக அப்பகுதியில் உள்ள இன்டர்நெட் முடக்கப்பட்டது.

தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை பாதுகாப்பு படையினர் நெருங்கியதும் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ரேபான் கிராமத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 5 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் பாதுகாப்புப் படையினருக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீவிரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

SCROLL FOR NEXT