இந்தியா

தொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறிவிட்டன- மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஏழை தொழிலாளர்களை பாதுகாக்க ரயில்வே வாரியமும் மாநிலஅரசுகளும் தவறிவிட்டதாக தேசியமனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) குற்றம்சாட்டியுள்ளது.

ஊரடங்கால் வேலை இழந்ததொழிலாளர்கள் தங்கள் சொந்தஊர்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். இவ்வாறு சொந்த ஊர்செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, குடிநீர் இன்றி தவிப்பதாக செய்திகள் வெளியானது. சிலர் இறந்துவிடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இவ்வாறு ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து வழக்கு பதிவு செய்த தேசிய மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு குஜராத், பிஹார் மாநில தலைமைச் செயலர்கள், ரயில்வே வாரிய தலைவர், மத்திய உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், "ரயில்களில் சொந்த ஊர் செல்லும் ஏழை தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க மாநில அரசுகளும், ரயில்வே நிர்வாகமும் தவறிவிட்டன. இது கவலை அளிக்கும் விஷயமாகும். ஏழை தொழிலாளர்களை காட்டுமிராண்டிகள் போல ரயில்வே நிர்வாகம் நடத்தியுள்ளது. அவர்கள் மீது மனிதத்தன்மையற்ற முறையில் ரயில்வே நிர்வாகம் நடந்துள்ளது. ஊரடங்கு என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் செய்த தவறுகளை மறைக்க முடியாது.

இதுதொடர்பாக அடுத்த 4 வாரங்களுக்குள் ரயில்வே வாரிய தலைவர், மத்திய உள்துறை செயலர், பிஹார், குஜராத் மாநிலதலைமைச் செயலர்கள் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.ஏழைத் தொழிலாளர் நலனுக்காக எடுக்கப்பட்ட அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தர வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT