உலகிலேயே பாஜகதான் பணக்கார கட்சி, ஆனால் ஏழைகள் மீது அக்கறை கொஞ்சம் கூட இல்லாத கட்சி என்று ராஷ்ட்ரீய ஜனதாதளக் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
உலகின் பணக்காரக் கட்சி பணக்காரர்களுக்கே சேவகம் செய்யும், ஏழைகளுக்கு அல்ல என்று அவர் தாக்கியுள்ளார்.
நரேந்திர மோடி 2.0-வின் ஓராண்டைக் கொண்டாட ஆயிரம் மெய்நிகர் பேரணிகளை நடத்த பாஜக முடிவெடுத்தது பற்றி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தேஜஸ்வி யாதவ்வை தொடர்பு கொண்டு கேட்டது.
அப்போது அவர் கூறுகையில், “நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பணக்காரக் கட்சி பாஜக, அவர்கள் பணக்காரர்களைத்தான் கவனிப்பார்கள் ஏழைகளை அல்ல. சாமானிய மக்களை தேர்தல் சமயத்தில் வாக்குகளுக்காக மட்டுமே அவர்கள் அணுகுவார்கள்.
பிஹாரில் தனிமை மையங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. தனிமைப்பிரிவுக்கு வரும் மக்களுக்கான வசதிகள் எதையும் செய்து தரவில்லை நிதிஷ் குமார் அரசு.
அரசு தங்கள் கடமைகளை நன்கு திட்டமிட்டு செய்ய முடியவில்லை எனில் எதிர்க்கட்சிகளின் உதவியை நாடியிருக்கலாம். , கோவிட்19 நெருக்கடியில் இத்தகைய மக்களுக்கு உதவுவது எதிர்க்கட்சிகளின் கடமையுமாகும்” என்றார் தேஜஸ்வி.