ஒரு சிவலிங்கம், சில உடைந்த சிலைகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராமர் கோயிலுக்காக அயோத்தியில் மிகப்பெரிய எந்திரங்களுடன் நிலத்தைச் சமப்படுத்தும் கட்டுமானப்பணிகள் மே 11ம் தேதி தொடங்கியுள்ளன. அப்போது 5 அடி சிவலிங்கம், 7 கருப்புத்தூண்கள், 6 செம்மணற்கல் தூண்கள், மற்றும் தெய்வங்கள், பெண் தெய்வங்களின் உடைந்த சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அறக்கட்டளை கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள், வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச அரசின் பொதுப்பணித்துறை, மின்சாரக் கார்ப்பரேஷன், ஆகியவை ஒரு தனியார் நிறுவனத்துடன் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளது
மாவட்ட அதிகாரிகளிடம் பெற்ற முறையான அனுமதியுடன் பணிகள் தொடங்கியுள்ளன, லாக் டவுன் முடிந்த பிறகு வேலைகள் வேகம் ப்பிடிக்கும் என்று தெரிகிறது , அறக்கட்டளை தன் உறுப்பினர்களுடன் லாக்டவுன் முடிந்தவுடன் பேச்சு நடத்த கூட்டம் கூட்டும்.
பவுத்தர்கள் குழு ஒன்று ராமஜென்ம பூமியில் ஏற்கெனவே பவுத்த ஸ்தூபி இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே பெரிய பெரிய எந்திரங்கள் மூலம் நிலம் சமப்படுத்தும் பணி நடக்கக் கூடாது என்றும் இது தங்கள் ஆதாரங்களை அழித்து விடும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது.
பவுத்தப் பிரிவைச் சேர்ந்த வினீத் மௌரியா என்பவர் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்டுள்ளார், அவர் தற்போது பிடிஐயிடம் கூறும்போது இந்த சிவலிங்கம் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு செய்யவிருப்பதாக தெரிவித்தார்.