நாடுமுழுவதும் ஜூன் 1-ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு வழிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘நாடுமுழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1-ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும். அதுபோலவே ரயில்கள் குறித்த விவரமும் விரைவில் வெளியிடப்படும்’’ எனத் தெரிவித்துள்ளது.