கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டுலுபேட்டை தொகுதியின் பாஜக எம்எல்ஏ நிரஞ்சன் குமாரின் மகன் புவன் குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விதிமுறைகளை மீறி மைசூரு - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் குதிரையில் வலம் வந்துள்ளார்.
திரைப்படங்களில் வருவதைப் போல குதிரை மீது அமர்ந்து புவன்குமார் வேகமாக பாய்ந்து வருவதைப் போன்ற வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கன்னட தொலைக்காட்சிகளிலும் நேற்று இக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு சமயத்தில் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ நிரஞ்சன் குமார் உள்ளூர் தொலைக்காட்சிகளில் வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆனால் அவரது மகன் முக கவசம் கூட அணியாமல் குதிரையில் தேசிய நெடுஞ்சாலையில் வலம் வந்தது அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதேபோல புவன் குமார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பாஜக எம்எல்ஏ நிரஞ்சன் குமார்கூறுகையில், “நான் ஊரில் இல்லாத சமயத்தில் இந்த சம்பவம்நடந்துள்ளது என்ன நடந்தது எனவிசாரித்து, தவறு இருந்தால் என்மகனைக் கண்டிப்பேன். அதேவேளையில் ஊரடங்கின்போது குதிரையில் செல்லக்கூடாது என எந்த விதிமுறையும் இல்லை'' என தெரிவித்துள்ளார்.