நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்ததையடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் இதன் திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.20 லட்சம் கோடி என்பது நாட்டின் ஜிடிபி-யான 200 லட்சம் கோடியில் 10% ஆகும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திப்பதாக நிதியமைச்சக சமூக ஊடகமான ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பில் நாடு சிக்கியிருக்கும் நிலையில், அதனை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்களிடம் நேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, நான்காம் கட்ட ஊரடங்கு 18ம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்றும், அது வித்தியாசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார் மோடி, இதற்கான திட்டங்களை, நிதியமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரூ.20 லட்சம் கோடிகளுக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என காங்., விமர்சித்திருந்தது. எனவே திட்டங்கள் குறித்து என்ன அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.