டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்மோகன் சிங்கிற்கு மருந்து கொடுத்ததால் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு (வயது 87) நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து இரவு 8.45 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் உடல்நிலையை இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான குழுவினர் பரிசோதித்து இரவிலிருந்து கண்காணித்து வருகின்றனர். மன்மோகன் சிங் உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “மன்மோகன் சிங்கை இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதிஷ் நாயக் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் கண்காணிப்பில்தான் மன்மோகன் உள்ளார்” எனத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங் தற்போது ராஜஸ்தான் மாநிலம் சார்பாக மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். 87 வயதானாலும் சத்தான உணவுகள், ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளால் நல்ல உடல்நலத்துடன் மன்மோகன் சிங் உள்ளார். கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் நடைபெற்ற காணொலிக் கூட்டத்தில் கூட மன்மோகன் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.