புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்மற்றும் பேருந்துகளுக்கு மத்திய,மாநில அரசுகள் ஏற்பாடு செய்துவருகின்றன. இந்நிலையில், இதற்காக காத்திருப்பதில் களைப்படைந்த பலர் நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இணையதளம் ஒன்றில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று உரையாற்றும்போது கூறியதாவது: சொந்த ஊர் செல்வதில் தீவிரமாக இருப்பவர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யாரும் நடந்து செல்ல வேண்டாம். இது பாதுகாப்பற்றதும் ஆகும். நடந்து செல்பவர்களில் பலருக்கு கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களிடம் உணவு கிடையாது. சிலர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து செல்கின்றனர். ஒருவர் தனது தாயை சுமந்து செல்வதை நான் பார்த்தேன். இது மன வேதனை அளிக்கிறது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை உங்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துக்கு நாங்கள் ஏற்பாடு செய்து வந்தோம். எனவே தயவுசெய்து நீங்கள் டெல்லியை விட்டு செல்லவேண்டாம். இங்கு ஊரடங்கு நீண்ட காலத்துக்கு இருக்காது. நிலைமை விரைவில் சீரடையும். இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.