இந்தியா

கடும் எதிர்ப்பால் முடிவை மாற்றிய எடியூரப்பா; வெளி மாநில தொழிலாளருக்காக சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு

இரா.வினோத்

கர்நாடகாவில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி கடந்த 4ம் தேதி பெங்களூருவில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து கடந்த 5-ம் தேதிமுதல் சிறப்பு பேருந்து, ரயில்கள்மூலம் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், "வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் கட்டுமான தொழிலை மேற்கொள்ள முடியாது. அவர்களை கர்நாடகாவிலேயே தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தொழிலாளர்களை அனுப்புவதற்கான சிறப்பு ரயிலை ரத்து செய்ய முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, உத்தர பிரதேச தொழிலாளர்கள் நடந்தே தங்களது ஊருக்கு செல்லப் போவதாக தெரிவித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை ஏராளமானோர் பகிர்ந்து, எடியூரப்பாவை கடுமையாக விமர்சித்தனர். இதையடுத்து, எடியூரப்பா திடீரென தனது முடிவை திரும்பப் பெறுவதாக நேற்று அறிவித்தார். வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தினமும் 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

          
SCROLL FOR NEXT