கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் நாகேஷ் 
இந்தியா

கர்நாடகாவில் மே 4-ம் தேதி முதல் மதுபான கடைகள் திறப்பு: மாநில அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் நாளை மறுதினம் ( மே-4ம் தேதி) முதல் மதுகடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் தொழில்கள் உட்பட பல விதி விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் பல மாநிலங்களிலும் தொழிற்சாலைகள் உட்பட பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடகாவில் நாளை மறுதினம் ( மே-4ம் தேதி) முதல் மதுகடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் நாகேஷ் கூறுகையில் ‘‘கர்நாடகாவில் நிலைமை சீரடைந்து வருவதால் வர்த்தக நிறுவனங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளை நாளை மறுதினம் (மே-4ம் தேதி) முதல் மதுகடைகள் திறக்க முடிவு செய்துள்ளோம்.

தனிப்பட்ட முறையில் செயல்படும் மதுபான கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பார்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள மதுபான கடைகள் திறக்கப்படாது. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை விற்பனை நடைபெறும். எனினும் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாது.’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT