இந்தியா

நாட்டில் பருவமழை பற்றாக்குறை 12 சதவீதமாக உயர்வு

பிடிஐ

நாட்டில் பருவமழை பற்றாக்குறை அளவு 12 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும், மகாராஷ்டிராவில் உள்ள மரத்வாடா பகுதியில் 50 சதவீத அளவு பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் 51 சதவீத பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது. இது கடந்த வாரத்தை விட 7 சதவீதம் குறைவாகும். மேலும் 36 சதவீத பகுதிகளில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தை விட 7 சதவீதம் அதிகமாகும்.

இந்திய வானிலைத் துறையின் தகவல்படி, தென்னக தீபகற்பம் மற்றும் மத்திய இந்தியா ஆகிய பகுதிகளில் 15 முதல் 20 சதவீதம் வரை மழை பற்றாக்குறை ஏற்பட் டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மரத்வாடா, கொங்கன் மற்றும் கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் முறையே 50, 38 மற்றும் 32 சதவீதம் வரை மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடலோர கர்நாடகா, தெற்கு கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் முறையே 44, 28, 25 மற்றும் 31 சதவீதமாக மழை பற்றாக்குறை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் 36 சதவீதமாகவும், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 30 சதவீதமாகவும் மற்றும் பஞ்சாப்பில் 31 சதவீதமாகவும் மழை பற்றாக்குறை பதிவாகியுள்ளது.

அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜார்க்கண்ட், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கிழக்கு ராஜஸ்தான், ஒடிசா, விதர்பா, சத்தீஸ்கர், அந்தமான் நிகோபர் தீவுகள், கடலோர ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.

நாடு முழுக்க 12 சதவீத அளவுக்கு மழை பற்றாக்குறை இருக்கும் என்று வானிலைத் துறை ஏற்கெனவே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT