தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில், எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்ட சந்தோஷ்-சிரிஷா தம்பதியை வாழ்த்திய உறவினர்கள். 
இந்தியா

திருமணத்துக்கு சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய மணமகன்

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம், சங்கா ரெட்டி மாவட்ட விவசாய துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சந்தோஷ். இவருக்கும் சிரிஷா என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை எளிய முறையில் பெண் வீட்டில் வைத்து திருமணம் நடந்தது. ஊரடங்கு அமலில் இருந்ததால், இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் சுமார் 30 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

இவர்களுடன், தெலங்கானா விவசாய துறை அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி, நாராயணகேட் தொகுதி எம்எல்ஏ பூபால் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அப்போது புதுமண தம்பதியினர் ரூ.2 லட்சத்தை கரோனா வைரஸ் தடுப்பு பணிக்கான நிவாரண நிதியாக அமைச்சர் நிரஞ்சன் ரெட்டியிடம் வழங்கினர். திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்காக சந்தோஷ் வழங்கியதும் அவரையும் அவரது மனைவியையும் அமைச்சர் நிரஞ்சன் ரெட்டி வெகுவாக பாராட்டினார். சந்தோஷை முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு, முதல்வரின் நிவாரண நிதிக்கு பண உதவி செய்ய பொதுமக்கள் முன் வரவேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே, மணமகன் சந்தோஷை ’சிட்டிஸன் ஹீரோ’ என முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும் அமைச்சருமான கே.டி. ராமா ராவ் சமூக வலைதளம் மூலம் பாராட்டி உள்ளார்.

SCROLL FOR NEXT