கரோனா தாக்குதல் வேகமாக பரவும் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினர்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கரோனா பரவும் ஹாட்ஸ்பாட்டுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் மற்றும் இணையமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் நேற்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கரோனா தாக்குதல் வேகமாக இரட்டிப்பாகும் பகுதிகள், மரண விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் மீது மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா சூழ்நிலையைக் கையாளுதலில் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் தேவைகளை சமாளிக்க ஆயத்தநிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.