கோப்புப்படம் 
இந்தியா

மிரட்டும் கரோனா: இந்தியாவில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது;  775 பேர் உயிரிழப்பு; 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்தனர்

ஐஏஎன்எஸ்

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. உயிரிழப்பு 775 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 24 ஆயிரத்து 506 பேர் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர். 5,062 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 18,668 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் நேற்று 15 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் நேற்று 9 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் நேற்று 3 பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் 27 பேரும், தெலங்கானாவில் 26 பேரும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 25 ஆகவும் உள்ளது. தமிழகத்தில் 22 பேர், கர்நாடகாவில் 18 பேர், பஞ்சாப்பில் 17 பேர், மேற்கு வங்கத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5 பேரும், ஹரியாணா, ஜார்க்கண்ட், கேரளாவில் தலா 3 பேரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பிஹாரில் 2 பேரும், ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 6,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 840 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து டெல்லியில் 2,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 857 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 2,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் 2,034 பேரும், தமிழகத்தில் 1,755 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் 866 பேர் குணமடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 1,852 பேரும், தெலங்கானாவில் 984 பேரும், கேரளாவில் 450 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 1,621 பேர், ஆந்திரவில் 955 பேர், கர்நாடகாவில் 474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 454 பேர், மேற்கு வங்கத்தில் 571 பேர், பஞ்சாப்பில் 298 பேர், ஹரியாணாவில் 272 பேர், பிஹாரில் 223 பேர், அசாமில் 36 பேர், உத்தரகாண்ட்டில் 48 பேர், ஒடிசாவில் 94 பேர், சண்டிகரில் 27 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், லடாக்கில் 20 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான் நிகோபர் தீவில் 27 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 40 பேர், புதுச்சேரியில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 3 பேர் குணமடைந்தனர். கோவாவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை. மோகாலயாவில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்டில் 53 பேர், மணிப்பூரில் 2 பேர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசத்தில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்''.

இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT