இந்தியா

அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடலா? - சுற்றுலா அமைச்சகம் விளக்கம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளதாவது:

சுற்றுலா அமைச்சகத்தின் பெயரில் போலி கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, சுற்றுலாத் துறையினரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்படுவதாக சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்ந்து பரப்பப்படுகிறது.

இந்த விவகாரம் சுற்றுலா அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்ததுள்ளது. சுற்றுலா அமைச்சகத்தினால் அத்தகைய கடிதம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று அந்த அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இதுபோன்ற போலிச் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் போலித் தகவல் சுற்றறிக்கை குறித்து சுற்றுலா அமைச்சகம் ஏற்கெனவே சமூக ஊடகங்களில் மறுப்புகளை வெளியிட்டுள்ளதுடன், மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகாரும் அளித்தது. பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் உண்மையறியும் சோதனைப் பிரிவும் சில நாட்களுக்கு முன்பு மறுப்புகளை வெளியிட்டது.

ஆனால் போலிச் செய்தி மீண்டும் பரப்பப்படுகிறது. இதுபோன்ற செய்திகளைப் புறக்கணிக்குமாறும், அதிகாரப்பூர்வத் தகவல் தொடர்புகளை மட்டுமே நம்புமாறும் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

          
SCROLL FOR NEXT