ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் முடங்கியதால், யமுனை நதியில் ஆக்ஸிஜன் அளவு 33 சதவீதம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பாயும் நதிகளில் கங்கைக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நதியாக யமுனை விளங்குகிறது. உத்தராகண்டில் உள்ள இமயமலை சிகரத்தில் உருவாகும் இந்த நதி, 1,376 கி.மீ. தொலைவு வரை பயணிக்கிறது.
ஒரு காலத்தில் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளை வளமாக்கி வந்த இந்த நதி, இப்போது மிக மோசமாக மாசடைந்திருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடை நீர் முதலியவை கலப்பதால் பல பகுதிகளில் யமுனை ஆற்று நீர் குடிப்பதற்கு தகுதியற்றதாக மாறியுள்ளது. இதனிடையே, கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக, தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் யமுனை ஆற்றிலும் அதன் துணை ஆறுகளிலும் இருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், யமுனை ஆற்றில் ஆக்ஸிஜன் அளவு 33 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.