கோப்புப்படம் 
இந்தியா

பிபிஎஃப், செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குதாரர்களுக்கு புதிய சலுகை: மத்திய அரசு அறிவிப்பு

பிடிஐ

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுன் முடிவால், பிபிஎஃப் கணக்கு வைத்திருப்போர், சுகன்யா சம்ரிதி கணக்கு (எஸ்எஸ்ஏ-செல்வமகள் சேமிப்புத் திட்டம்) வைத்திருப்போர் தங்களின் ஆண்டு குறைந்தபட்ச டெபாசிட் தொகையை ஜூன் மாதம் வரை செலுத்த மத்திய அரசு சலுகை அளித்துள்ளது

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொழிற்சாலை, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஏழைகள், கூலித்தொழிலாளிகள் வேலையின்றி இருக்கிறார்கள்.

வருமானமின்றி இருக்கும் இவர்களின் வேதனையைப் போக்கும் வகையில் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி பல சலுகைகளை அளித்துள்ளது. கடன் தவணைகளை 3 மாதங்களுக்குப் பின் செலுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தபால் நிலையங்களில் பிபிஎஃப் டெபாசிட், சுகன்யா சம்ரிதி கணக்கு வைத்திருப்பவருக்கும் சலுகை அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சம் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “பிபிஎஃப் கணக்கு வைத்திருப்போர், சுகன்யா சம்ரிதி கணக்கு வைத்திருப்போர், ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) வைத்திருப்போருக்கு மத்திய அரசு விதிமுறைகளைத் தளர்த்தியுள்ளது. லாக் டவுன் நேரத்தைக் கருத்தில் கொண்டு, சிறுசேமிப்பு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.

இதன்படி, இந்தக் கணக்குதாரர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது குறைந்தபட்ச டெபாசிட் செய்வது கட்டாயம். இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும். சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் நிதியாண்டின் கடைசி மாதத்தில் டெபாசிட் செய்து அதை வருமான வரிவிலக்கு 80சிபடிவத்தில் கழிப்பார்கள்.

லாக் டவுன் காரணமாக 2019-20 ஆம்நிதியாண்டில் மார்ச் மாதத்தில் டெபாசிட் செலுத்த முடியாத கணக்குதாரர்கள் கடந்த நிதியாண்டுக்கான டெபாசிட் தொகையை வரும் ஜூன் மாதம் வரை செலுத்தலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்காக தபால் நிலைங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது மாதந்தோறுமோ பணம் செலுத்தலாம். இதற்கு குறைந்தபட்ச டெபாசிட் தொகை ஆண்டுதோறும் செலுத்த வேண்டும். அந்த வகையில் மார்ச் மாதம் செலுத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தவர்கள் செலுத்த முடியாமல் போனால் அவர்கள் ஜூன் மாதம் வரை செலுத்தலாம்.

SCROLL FOR NEXT