இந்தியா

கரோனாவில் இருந்து குணமடைந்தார் கனிகா கபூர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிகா கபூர் குணமடைந்ததை தொடர்ந்து சிகிச்சை முடிந்து மருத்துவனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதியான நிலையில் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்றார். லக்னோவில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் கூறவில்லை எனக்கூறப்படுகிறது.

விருந்து நிகழ்ச்சியில் அவருடன் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோரும் தங்களை முன்னெச்ரிக்கையாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டது.

இந்தநிலையில் கனிகா லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகச்சை அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. கனிகா கபூர் உடல் நிலை சமநிலையில் இருப்பதாகவும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் அவருக்கு 6-வது முறையாக கரோனா தொற்று சோதித்து பார்க்கப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று மறைந்து குணமடைந்தது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT