குஜராத் மாநிலம் பரூச் நகரில் வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் மக்களும் கரோனாவுக்கு எதிராக மெழுகுவர்த்தியை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும் ஏறக்குறைய 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி நேற்று ஏராளமான மக்கள் வீடுகளில் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து வீட்டின் மின்சார விளக்குகளை அணைத்து வைத்தனர்.
கரோனாவை விரட்ட மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் மின்சார விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றியும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில் குஜராத் மாநிலம் பரூச் நகரில் வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் மக்களும் கரோனாவுக்கு எதிராக மெழுகுவர்த்தியை ஏற்றினர். பரூச் நகரின் தெருவில் வசிக்கும் மக்கள் சமூகவிலக்கலுடன் தனித்தனியே விலகி இருந்தபோதிலும் நேற்று இரவு 9 மணியளவில் மெழுகுவர்த்திகளை ஏற்றி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.