கரோனா வைரஸ் தொற்றுக்கு பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் பொற்கோயில் ‘ஹசூரி ராகி’யும் குர்பானி பாடகருமான நிர்மல் சிங் என்பவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது மகன், நிர்மல் சிங் மரணிக்கும் முன்பாக செய்த தொலைபேசி உரையாடலை வெளியிட்டு பரபரப்பு புகார் எழுப்பியுள்ளார்.
நிர்மல் சிங் தன் மகனிடம் பேசிய கடைசி தொலைபேசி உரையாடலில், “எனக்குத் தனிமைப்பிரிவில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனக்கு மருத்துவர்கள் மருந்தே அளிக்கவில்லை. இப்படியே தொடர்ந்தால் நான் இறந்து விடுவேன்” என்று அந்தத் தொலைபேசியில் நிர்மல் சிங் மரணிக்கும் முன்பாகப் பேசியுள்ளார்..
மேலும் தன்னை வேறு மருத்துவமனைக்கு மாற்றுங்கள் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் நிர்மல் சிங் கூறியதாகத் தெரிகிறது.
எனவே மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே நிர்மல் சிங் மரணமடைந்ததாக குடும்பத்தினர் வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளனர். 62 வயதான நிர்மல் சிங் வியாழனன்று மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கம் போல் அரசு மருத்துவமனை இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, ‘முறையான சிகிச்சை அளித்தோம்’ என்று கூறியுள்ளது.
இதற்கிடையே மருத்துவ உதவிக்குழுக்கள், மருத்துவ ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உடைகள் கவசங்கள் வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.