நாடு முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன் உத்தரவு அமலில் இருந்தாலும் மக்கள் பல காரணங்களைக் கூறிக்கொண்டு சாலைகளில் திரிவது வழக்கமாகி வருகிறது, இதனையடுத்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் கக்ரோலி என்ற கிராமத்தில் லாக்-டவுன் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் வெளியே சுற்றித்திரிந்தனர். இவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு 30 வயது மதிக்கத்தக்க ஜாவேத் என்ற நபர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து மக்கள் கூட்டத்தில் ஒரு 6 பேர் ஜாவேதை அடித்து உதைத்ததோடு அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனையடுத்து ஜாவேத் மருத்துவ சிகிச்சைகாக மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
உயர் போலீஸ் அதிகாரி விஜய் பகதூர் சிங் என்பவர் ஜாவேத்தை தாக்கிய 6 பேர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர், ஆனால் 6 பேரும் மாயமாகியுள்ளனர், இவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஜாவேத்தும் அவரது சகோதரர் தில்ஷத்தும் தெருவில் கூடியிருந்த மக்களை வீட்டுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இருவரையும் போட்டுத் தாக்கியுள்ளதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர், இதில் ஜாவேத் காயமடைந்தார், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக எஃப்.ஐ.ஆர்.-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.