மோடியைப் பின்பற்றினால், ஓடிப்போகும் கரோனா என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று என்பது இந்தியாவை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக எண்ணிக்கையிலேயே அதிகரித்து வந்தது. தற்போது இதன் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 100 பேர் என்ற கணக்கில் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு.
பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி வருகிறார்கள்.
தற்போது தெலங்கானா ஆளுநர் தமிழிசையும், கரோனா தொடர்பாகக் கவிதை நடையில் பேசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''தனியாக இல்லையென்றால் தவிக்க வைக்கும் கரோனா
தொட்டுக் கொண்டே இருந்தால் தொற்றிக் கொள்ளும் கரோனா
வீட்டிலேயே நாம் இருந்தால், விட்டு ஓடும் கரோனா
விலகலைக் கடைப்பிடித்தால், விலகி ஓடும் கரோனா
படியை நாம் தாண்டினால் பிடித்துக் கொள்ளும் கரோனா
கழுவினால் கைகளை, நம்மைத் தழுவாமல் ஓடும் கரோனா
தூரமாய் நாம் இருந்தால், துரத்தப்படும் கரோனா
ஒட்டியிருந்தால் நம்மை, ஒட்டிக் கொள்ளும் கரோனா
பிரிந்து பிரிந்து நாம் இருந்தால், பதறி ஓடும் கரோனா
வெளிப்படையாய் நாம் சென்றால், கலிப்படைந்து தொற்றும் கரோனா
ஊரடங்கு இல்லையென்றால், நம் உயிரை அடக்கும் கரோனா
தொற்று தடுப்பைப் பின்பற்றினால், தோற்று ஓடும் கரோனா
ஊரடங்கைப் பின்பற்றினால், ஊரை விட்டே ஓடும் கரோனா
நாட்டின் பிரதமரைப் பின்பற்றினால், நாட்டை விட்டே ஓடும் கரோனா
மருத்துவர்களின் அறிவுரையைப் பின்பற்றினால், மரித்துப் போகும் கரோனா
மோடியைப் பின்பற்றினால் ஓடிப்போகும் கரோனா
மோடியைப் பின்பற்றினால், ஓடிப்போகும் கரோனா".
இவ்வாறு பேசியுள்ளார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
மேலும், இவர் தெலுங்கில் பேசி வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள். ஆளுநராகப் பதவி ஏற்ற சில நாட்களிலேயே இவ்வளவு அழகாகத் தெலுங்கு பேசி வருகிறாரே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.