உலக மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு உலகளவி்ல் பலியானோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.65 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலக சமூகத்தை அச்சுறுத்தும் நோயாக கரோனா வைரஸ் மாறியுள்ளது. இதுவரை எந்த நோயும் இதுபோல் மனித சமூகத்தை பாதித்ததில்லை. மனித சமூகத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக கரோனா வைரஸ் இருந்து வருகிறது.
சீனாவின் ஹுபே மாநிலம், வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் 3 மாதங்களில் உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது ஆதிக்கத்தை பரப்பியுள்ளது.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின் படி இன்றைய நிலவரப்படி உலகளவில் கரோனா வைரஸ் நோய்க்கு 6 லட்சத்து 63 ஆயிரத்து 730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதில் கரோனா வைரஸால் 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் மூன்றில் இரு பகுதி ஐரோப்பிய நாட்டவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் கரோனா வைரஸால் பீடிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.
உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2ஆயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர்.
அடுத்ததாக இத்தாலியில் 10 ஆயிரத்து 23 பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 92 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது இடத்தில் சீனாவில் 3,300 பேர் பலியாகியுள்ளனர், 81 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் 5,952 பேர் பலியாகியுள்ளனர், 73 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸில் கரோனா வைரஸ் 2 ஆயிரத்து 314 பேரைக் காவு வாங்கியுள்ளது, 37 ஆயிரத்து575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரானில் 2 ஆயிரத்து 517 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர், 35 ஆயிரத்து 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் இதுவரை 1,019பேர் பலியாகியுள்ளனர், 17 ஆயிரத்து 089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தவிர ஜெர்மனியில் 433 பேர் கரோனாவில் உயிரிழந்துள்ளனர்,57 ஆயிரத்து 695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது