இந்தியா

ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்த மக்கள்; கரோனா எதிர்ப்பு போராட்டத்தில் முதல் வெற்றி: பிரதமர் மோடி நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் மக்கள் ஊரடங்கை கடை பிடித்து வருவதற்கும், கரோனா எதிர்ப்பு களத்தில் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களை பாராட்டும் வகையில் 5 மணியளவில் ஆங்காங்கே இருந்து ஒசை எழுப்பியதற்கு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போதும் 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதிவரை திறக்கத் தடை விதித்தது. ரயில்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி மக்கள் ஊரடங்கு நடந்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாட்டின் பல பகுதிகளிலும் பிரதமர் மோடி அறிவித்தபடி கரோனா எதிர்ப்பு களத்தில் போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களை பாராட்டும் வகையில் 5 மணியளவில் ஆங்காங்கே இருந்து ஒசை எழுப்பி தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இதுபற்றி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தி்ல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளதாவது:
‘‘மக்கள் ஊரடங்கு; கரோனா வைரஸ் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த நாடு நன்றி தெரிவிக்கிறது. கொடிய நோயை எதிர்த்து போராடும் நீண்ட நெடிய போாராட்த்தில் நமக்கு கிடைத்த முதல் வெற்றி இது’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT