டெல்லி பன்னாட்டு விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று சோதனை நடைபெறும் நிலையில் நேற்று இரவு மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
எனினும் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மெல்ல உயர்ந்து வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்கு பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன.
இந்தநிலையில் டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டு வருகைப்பகுதியில் நேற்று இரவு மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று சோதனை நடைபெறுவதை பார்வையிட்டார்.
மேலும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்த அவர் பயணிகளிடமும் விவரங்களை கேட்டார்.