கனிமொழி, பிரகலாத் சிங் படேல் | கோப்புப் படம். 
இந்தியா

இந்தியத் தொல்லியல் துறை பற்றி தமிழகத்தில் தவறான கருத்துகள் நிலவுகின்றன: கனிமொழி புகாருக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பதில்

ஆர்.ஷபிமுன்னா

இந்தியத் தொல்லியல் துறை பற்றி தமிழகத்தில் தவறான கருத்துகள் நிலவுவதாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் இன்று மக்களவையில் தெரிவித்தார். மக்களவையின் திமுக எம்.பி.க்கள் குழு துணைத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இதுகுறித்து மக்களவை திமுக எம்.பிக்கள் குழு துணைத் தலைவரான கனிமொழி கூறும்போது, ''சுப்ரியா சுலேவின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட புராதன நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில், கட்டிடங்கள் கட்டுவதற்காக நிதி ஒதுக்க மாநில அரசுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ஆனால், மத்திய தொல்பொருள் துறையின் அனுமதியில்லாமல் புராதன நினைவுச் சின்னங்களில் எந்தப் பணியும் நடைபெறுவதில்லை. தமிழகத்தில் தொல்பொருள் துறையால் பாதுகாக்கப்பட்ட புராதனச் சின்னங்கள் இருக்கின்றன. ஆனால், அப்பகுதிகளில் எவ்வித கட்டுமானப் பணிகளுக்கும் மாநில அரசு அனுமதி அளிக்க முடியாத நிலையே இருக்கிறது. இதுகுறித்து அமைச்சர் தெளிவுபடுத்திட வேண்டுகிறேன்'' எனத் தெரிவித்தார்.

இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பதிலளித்துப் பேசும்போது, ''இந்திய தொல்லியல் துறை பற்றி தமிழ்நாட்டில் சில தவறான கருத்துகள் நிலவுகின்றன. இந்திய தொல்லியல் துறை விதிமுறைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. அதன் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் வேறு பணிகளைச் செய்ய மாநில அரசுகளின் துறைகளுக்கு நாங்கள் பல முறை அனுமதிக்கவில்லை. அதேநேரம் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டிய தேவை இருந்தால், அனுமதிகள் வழங்கப்படுகின்றன.

நாட்டிற்குள் மட்டுமல்ல, வெளியில் கூட விதிமுறைகளின்படியேதான் செயல்படுகிறது. மாநில அரசுகளுக்கு இதுபற்றி ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை எங்கள் கவனத்துக்குக் கொண்டுவரலாம். இதற்கு இந்திய தொல்லியல் துறை எந்த தடையும் ஏற்படுத்தாது என உறுதியளிக்க விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT