அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கு மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மும்பை உட்பட மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளுக்கு பேட்டியளித்ததாவது:
மக்கள் அடுத்த 10 முதல் 15 நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷாராக இருக்க வேண்டும். ஹோலி உட்பட பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். பிரதமர் மோடி இதுபற்றி ஏற்கெனவே அறிவித்துள்ளார். ’’ என உத்தவ் தாக்கரே கூறினார்.