இந்தியா

கரோனா வைரஸ்;  டைட்டானிக் கப்பல் கேப்டன் போல பேசுவதா? - சுகாதாரத்துறை அமைச்சரை கிண்டல் செய்த ராகுல் காந்தி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக . டைட்டானிக் கப்பல் கேப்டன் போல சுகாதாரத்துறை அமைச்சர் பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.

டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது இடங்களில் அதிகமானோர் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு ஹோலி கொண்டாட்டங்கள் எதிலும் பங்கேற்பதில்லை என பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘‘கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக . டைட்டானிக் கப்பல் கேப்டன் போல சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகிறார். இந்த கப்பல் மூழ்காது எனவே பீதியடைய வேண்டாம் என பயணிகளிடம் கேப்டன் கூறுவதை போல உள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த செயல் திட்டத்தை மத்திய அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT