இந்தியா

டெல்லி கலவரம்; 69 மணிநேரம் கழித்து தான் விழித்துக் கொள்வதா? - பிரதமர் மோடிக்கு கபில் சிபல் சரமாரி கேள்வி

செய்திப்பிரிவு

டெல்லியில் கலவரம் நடந்த 69 மணிநேரம் கழித்து தான் பிரதமர் மோடி விழித்துக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரத்தை உரிய நேரத்தில் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் இதுபற்றி கூறியதாவது:

‘‘டெல்லியில் கலவரம் நடந்த 69 மணிநேரம் கழித்து தான் பிரதமர் மோடி விழித்துக் கொள்கிறார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். இதனை அவர் முன்கூட்டியே செய்திருக்க வேண்டாமா.

ஆனால் டெல்லி காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமித் ஷா மக்கள் அமைதி காக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமித் ஷா நேரில் சென்று பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT