இந்தியா

டெல்லியில் இயல்பு நிலை திரும்புகிறது: கடைகள் திறந்தன

செய்திப்பிரிவு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி திரும்பி வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே ஷாகின் பாக் பகுதியில் 70 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ஏற்கெனவே பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ள நிலையில் மேலும் இறந்தநிலையில் மேலும் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதையடுத்து கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் டெல்லியில் ஒரளவுக்கு அமைதி திரும்பியுள்ளது. கடைகள் திறக்கப்பட்டு வணிகம் நடைபெறுகிறது. சாலைகளில் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

மக்கள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர். எனினும் அனைத்து பகுதிகளிலும் போலீஸாரும், துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT