மேகாலயா ஆளுநர் ததகதா ராய் : கோப்புப்படம் 
இந்தியா

வன்முறையாளர்களை ஒடுக்குவது குறித்து தினான்மென் சதுக்கத்திலிருந்து பாடம் கற்க வேண்டும்: மேகாலயா ஆளுநர் சர்ச்சைக் கருத்து

பிடிஐ

வன்முறையில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்தவும், அடக்கவும், சீனாவின் தினானமென் சதுக்கச் சம்பவத்தில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்று மேகாலயா ஆளுநர் ததகதா ராய் சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு, ஜுன் 4-ம் தேதி சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தினான்மென் சதுக்கத்தில் ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டம் நடந்தது. அப்போது, போராட்டக்காரர்களை அடக்கும் பொருட்டு சீன ராணுவம் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. இந்த அடக்குமுறையைக் குறிப்பிட்டு ஆளுநர் ததகதா தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ததகதா ராய் ட்விட்டரில் கூறுகையில், "கடந்த 1988-ம் ஆண்டு சீனாவின் தினான்மென் சதுக்கம் நினைவிருக்கிறதா? அங்கு போராட்டக்காரர்களை எவ்வாறு டெங் ஜியாபிங் கையாண்டார் தெரியுமா? வடகிழக்கு டெல்லியில் நிகழும் வன்முறையை அடக்குவதற்கு தினான்மென் சதுக்கத்திலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். என் கருத்தை அனைவரும் ஏற்பார்கள்" எனத் தெரிவித்தார்.

இதனை நேற்று பதிவிட்ட ஆளுநர் ததகதா ராய்க்கு எதிர்ப்பு வலுத்தது. இதனையடுத்து அப்பதிவை நீக்கிவிட்டார்.

மற்றொரு ட்வீட்டில் ஆளுநர் ததகதா ராய் குறிப்பிடுகையில், "டெல்லி வடகிழக்கில் கலவரம் நடந்த நேரத்தைப் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்த நேரத்தில் நடந்துள்ளது. ஆனால், ட்ரம்ப் போன்ற சிறந்த நிர்வாகி, நிச்சயம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரமான 370 ரத்து, முத்தலாக், சிஏஏ ஆகியவற்றைப் பேச மாட்டார்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT