கேரள உயர் நீதிமன்றம் : கோப்புப்படம் 
இந்தியா

பள்ளி, கல்லூரிகளில் அனைத்து வகையான போராட்டங்களையும் நடத்தத் தடை: கேரள உயர் நீதிமன்றம்

பிடிஐ

கேரளாவில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் மாணவர் அமைப்புகள் எந்தவிதமான போராட்டங்கள், பேரணிகளை நடத்தத் தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுபோன்ற போராட்டங்கள் மற்ற மாணவர்களின் படிப்பைக் குலைக்கிறது. அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறது எனக்கூறி இந்தத் தடையை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதன்படி பள்ளி, கல்லூரியை கெரோ செய்தல், வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம், வளாகத்தில் அமர்ந்து போராட்டம் செய்தல், ஊர்வலம் செல்லுதல் என எந்த விதமான போராட்டத்தையும் மாணவர் அமைப்பினர் நடத்தக்கூடாது.

பல்வேறு கல்லூரிகள், பள்ளிக்கூட நிர்வாகங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவில் , பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நடக்கும் போராட்டத்தால் அமைதியான சூழல்கெட்டு, மற்ற மாணவர்கள் படிப்பும் பாதிப்படைகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி பி.பி. சுரேஷ் குமார் தலைமையிலான ஒரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டது. மனுவை விசாரித்து நீதிபதி சுரஷ் இன்று பிறப்பித்த உத்தரவில், "மாநிலத்தில் எந்த பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளிலும் மாணவர் அமைப்பு தர்ணா, போராட்டம், உள்ளிருப்பு, அமர்ந்து போராட்டம் செய்தல், கெரோ என எந்த வகையான போராட்டங்களையும் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள் என்பவை அமைதியான முறையில் ஆலோசனை நடத்தும் இடம், கல்வி கற்கும் இடமாகும். போராட்டம் நடத்தும் இடமல்ல. இந்தத் தடை உத்தரவு மற்றவர்களுக்கும் பொருந்தாது" என நீதிபதி உத்தரவில் தெரிவித்தார்

ஏற்கெனவே ஒரு வழக்கில் மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு தர்ணா, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் ஆகியவற்றைப் பள்ளி கல்லூரிகளில் நடத்துவதை உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. கடந்த 2017-ம் ஆண்டு அளித்த தீர்ப்பு ஒன்றில், பள்ளி, கல்லூரிகளில் போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், அவர்களை நீக்கலாம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT