இந்தியா

நூறாண்டுகளில் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தது திராவிட இயக்கம்: ஜேஎன்யுவில் 'தி இந்து' வாசகர் ஆசிரியர் பன்னீர்செல்வன் உரை

ஆர்.ஷபிமுன்னா

கடந்த நூறாண்டுகளில் பல சீர்திருத்தங்களை திராவிட இயக்கம் கொண்டுவந்ததாக ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் வாசகர் ஆசிரியர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் தெரிவித்தார். இதை அவர், டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இடையே ‘சுயமரியாதை திராவிட இயக்கமும், இந்திய கூட்டாட்சியும்’ எனும் தலைப்பில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

ஜேஎன்யுவின் பல்வேறு துறைகளின் மாணவர்கள், பேராசிரியர்கள், டெல்லியின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த தமிழ் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதில் அவர், கடந்த நூறாண்டுகளில் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளை இருபது ஆண்டாக ஐந்து கட்டங்களாகப் பிரித்து இந்திய ஒன்றியத்தில் அதன் பங்களிப்பினையும் தாக்கத்தையும் பற்றி விரிவாகப் பேசி இருந்தார்..

இது குறித்து பன்னீர்செல்வன் ஆற்றிய உரையின் சுருக்கம் பின்வருமாறு:

''1919 ஆம் ஆண்டு மாண்டிக் செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டது. இதில், பெரும்பான்மை சமுதாய மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வதாக இல்லை. இந்நேரத்தில் 1916 இல் பிராமணர் அல்லாத இயக்கம் உருவெடுத்தது.

1920 இல் தமிழகத்திற்கு நீதிக்கட்சி ஆட்சிக்கும் வந்தது. அப்போது அந்த அரசு அனைத்து சமுதாய மக்களுக்கும் காலியான அரசு பணியிடங்களில் அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டது. இது, 1927 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டது.

1921 இல் நீதிக்கட்சியினரே பெண்களுக்கும் வாக்குரிமை என்பதை நடைமுறைக்கு முதன்முதலாக கொண்டு வந்தார்கள். இதுபோன்ற பல சீர்திருத்தங்களை திராவிட இயக்கத்தினர் கொண்டு வந்தனர்

திராவிட இயக்கம் கடந்த நூற்றாண்டுகளில் பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல நல்ல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதிகாரப் பரவலாக்கம் மூலம் பொதுமக்களிடம் சமூகநீதி நிலைக்கப் பாடுபட்டுள்ளது.

இதுபோன்ற சாதனைகளுக்காக திராவிட இயக்கத்தின் தலைமை இரண்டுவகை கொள்கைகளை பின்பற்றினர். இதற்காக அவர்கள் அவசியப்படும் நேரங்களில் எந்த நிபந்தனையும் இன்றி ஏற்புடைமை கொள்கையையும் பின்பற்றி உள்ளனர்.

1916 முதல் 1936 வரை திராவிட இயக்கம் ஒரு கருவாக உருவானது. இந்த கட்டத்தில் அது சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை அடையாளம் காண்கிறது. இதன் அடுத்த இருபதாண்டுகளில் திராவிட இயக்கத்தினர் தம் எதிர்ப்புகளை முன்வைத்தனர்.

கடவுள் மறுப்புக் கொள்கை

இதில், குறிப்பாக பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை பெரிதாக இடம் பெற்றது. அறிஞர் அண்ணாதுரை ஆட்சியிலும் தமக்கு பங்கு இருக்க வேண்டும் என முன்வைக்கிறார்.

இதன் அடிப்படையாகக் கொண்டே திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் என இரு கட்சிகள் உருவாகின்றன. இவ்விரு கட்சிகளுக்கும் கருத்து மோதல் உருவான போது, தம் கட்சி ஆட்சியின் மூலமாக திராவிட இயக்கத்தை திமுக முன்னெடுத்துச் செல்வதாக முரசொலி மாறன் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

மூன்று முக்கிய அம்சங்கள்

இரண்டாவது இருபதாண்டுகளில் மூன்று முக்கியமான அம்சங்கள் திராவிட ஆட்சியில் நடைபெற்றன. இதில், மொழி உரிமை, சமூக நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

கடைசி இருபதாண்டுகளில் பெரிய மாற்றம்

சுயமரியாதைக்காக தோன்றிய திராவிட இயக்கம் இந்த நூறாண்டுகால வரலாற்றின் 1996 முதல் 2016 வரையிலான கடைசி இருபதாண்டுகளில் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி விட்டது. இக்காலககட்டத்தின் நடைபெற்ற நிகழ்வுகளின் பேச்சுவார்த்தைகளில் எதைக் கூறினாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மாறி விட்டது''.

இவ்வாறு அவர் பேசினார்.

திராவிடக் கட்சி தலைவர்களின் தவறுகள்

உரையைத் தொடர்ந்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பன்னீர்செல்வன் பதிலளித்தார். இதில் அவர், திராவிடக் கட்சிகளின் செயல்களில் பல்வேறு குறைகளும் இருந்ததாக எடுத்துரைத்தார்.

SCROLL FOR NEXT