பெங்களூருவில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த பேரணியில் மேடை ஏறி 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழங்கிய இளம் பெண் கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நேற்று (வியாழக்கிழமை மாலை) குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நேற்று நடந்தது. இந்தப் பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கலந்து கொண்டார்.
அப்போது, பேரணியில் கலந்து கொண்ட இளம்பெண் அமுல்யா மேடை ஏறி பேசும் போது, 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என முழங்கினார்.
மேடையில் இருந்த ஒவைஸி உட்பட அனைவரும் செய்வதறியாது திகைத்துப் போயினர். சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட ஓவைஸி அந்தப் பெண்ணை தடுக்க முற்பட்டார். ஆனால் அந்த இளம் பெண்ணோ மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதனையடுத்து போலீஸார் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
இதனால் பேரணியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை உணர்ந்த ஒவைஸி, அந்த பெண்ணின் பேச்சுக்கு மேடையிலேயே கண்டனம் தெரிவித்தார். மேலும், அந்தப்பெண்ணுக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அமுல்யாவை தேசத்துரோக வழக்கின் கீழ் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.