கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா : கோப்புப் படம். 
இந்தியா

சிஏஏவுக்கு ஆதரவாக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றத் திட்டம்

பிடிஐ

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என கர்நாடக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் மார்ச் 2 மற்றும் 3-ம் தேதிகளில் அரசியலமைப்புச் சட்டம் குறித்த சிறப்பு விவாதம் சட்டப்பேரவையில் நடத்த சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி முடிவு செய்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, அது தொடர்பாக சிறப்பு விவாதங்களை இரு நாட்கள் நடத்த சபாநாயகர் விஸ்வேஸ்வர் முடிவு செய்துள்ளார்.

இந்தச் சிறப்புக் கூட்டம் முடிந்த பின், சிஏஏவுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றும்போது காங்கிரஸ், ஜேடியு கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும். இருப்பினும் தீர்மானம் நிறைவேற்றுவதில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு தீர்மானமாக இருக்கிறது எனத் தெரிகிறது.

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் சிஏஏ சட்டத்தைக் கொண்டுவந்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. தெலங்கானா மாநிலம் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

இந்தச் சூழலில் கர்நாடக மாநிலம் சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் கடந்த மாதம் போராட்டம் நடந்தது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தீவிரப் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட பின் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. பெங்களூருவிலும் கடந்த மாதத்தில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT