தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு ஒருநாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மகள் திருணமத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய ரிக்ஷா ஓட்டுநர் மங்கள் கேவத் என்பவரைச் சந்தித்தது நெகிழ்ச்சி மிகு சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
மங்கள் கேவத்தை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவரது ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார். தூய்மை இந்தியா இயக்கத்துக்காக ரிக்ஷா ஓட்டுநர் மங்கள் கேவத்தின் பங்களிப்புக்காக பிரதமர் மோடி அவரைப் பாராட்டினார்.
மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் அகத்தூண்டுதல் பெற்ற மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றுக் கரையைத் தானே சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினார்.
மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி வராவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பியது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று கூறிய மங்கள் கேவத், “பிரதமர் அலுவலகத்தில் நானே சென்று மகள் திருமண அழைப்பிதழை கொடுத்தேன். பிப்.8ம் தேதி பிரதமரிடமிருந்து வாழ்த்துச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. பிரதமரின் வாழ்த்துச் செய்தி எங்கள் குடும்பத்திற்கு உற்சாகமளித்தது” என்றார்.