இந்தியா

அசாமில் வன்முறையை தூண்டும் சக்திகள்: பிரதமர் மோடி சாடல்

செய்திப்பிரிவு

அசாமுக்குள் உள்ளேயும், வெளியேயும் சில சக்திகள் வேண்டுமென்ற திட்டமிட்டு புரளியை பரப்புவதாக பிரதமர் மோடி கூறினார்.

அசாம் மாநிலத்தில் வசிக்கும் போடோ பழங்குடியின மக்களின் உரிமைகளை வலியுறுத்தி போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பு ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தது. அந்த அமைப்புடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

மத்திய அரசு, அசாம் மாநில அரசு மற்றும் என்டிஎப்பி இடையே அண்மையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, போடோ பழங்குடியின மக்களுக்கு மாநில பிரிவினையின்றி அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு அரசியல், பொருளாதார உரிமைகள் வழங்கப்பட உள்ளன.

இதனை கொண்டாடும் விதமாக இன்று அசாமில் போடோ பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள கோக்ராஜர் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:

போடோ நில உரிமை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்கிறேன். 50 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளீர்கள். போடோ இயக்கத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரின் உணர்வும் மதிக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாக குடியிருக்கும் நிலை இருந்து வந்தது. போடோ ஒப்பந்தத்தின் மூலம் அவர்களுக்கு புதிய வசதிகளும், தேவைகளும் கிடைக்கும் சூழல் உள்ளது.

அசாம் எதிரான உணர்வையும், தேசத்துக்கு எதிரான உணர்வையும் சகித்துக் கொள்ள முடியாது. அசாமுக்குள் உள்ளேயும், வெளியேயும் சில சக்திகள் வேண்டுமென்ற திட்டமிட்டு புரளியை பரப்புகின்றன. இதனை ஏற்க முடியாது.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். யாருடைய நலனும் பாதிக்கப்படாது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT