இந்தியா

'வீட்டு வாட்டர் டேப்'பை திறந்தால் அதிர்ச்சி; குழாயில் வந்த 'மது'வால் கேரளக் குடியிருப்புவாசிகள் கலக்கம்

பிடிஐ

வீட்டுத் தண்ணீர் குழாயில் தண்ணீர் வந்தால் அதில் வியப்படையத் தேவையில்லை. ஆனால், குழாயில் மதுபானம் வந்தால் எப்படி இருக்கும்? கேரளாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம், சாலக்குடியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சாலக்குடி நகரில் உள்ள நியூ சாலமன் குடியிருப்புப் பகுதி உள்ளது. இங்கு 18க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் குடியிருப்பு மக்களுக்கு மட்டும் தண்ணீர் வழங்குவதற்காக ஒரு கிணறு இருக்கிறது. இந்தக் கிணற்றில் இருந்து குடியிருப்புவாசிகளின் பயன்பாட்டுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் வழக்கம் போல் குடியிருப்புவாசிகள் வீட்டுத் தண்ணீர் குழாயைத் திறந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். குழாயிலிருந்து வந்த தண்ணீர் அனைத்தும் மதுவின் வாசனையோடு இருந்தது. அதைக் குடித்தாலும், மதுவைக் குடித்ததுபோன்று இருந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் வந்து ஆய்வு செய்ததில் கிணற்றுக்கு அருகே இருக்கும் பெரிய பள்ளத்தில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்துள்ளன. அந்த மதுவகைகள் கிணற்று நீரில் கலந்து மதுவாக மாறியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சாலக்குடி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக இயங்கிய மதுபாரில் இருந்து 450 பெட்டிகள் கொண்ட மதுவகைகளைப் ரஞ்சாலக்குடா கலால் வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அந்த மது வகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்த நிலையில் 2500 லிட்டர் மது வகைகளை நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டது. ஆனால், கலால் வரித்துறையினர் 450 பெட்டி மது வகைகளையும் அழிக்காமல் குடியுரிப்புவாசிகள் கிணற்றுக்கு அருகே இருக்கும் பள்ளத்துக்குள் கொட்டிவிட்டுச் சென்றனர். அந்த மது வகைகள் மெல்லத் தரைக்குள் இறங்கி குடிதண்ணீரில் கலந்துள்ளது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இரிச்சாலக்குடி கலால் வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "450 வகையான பல்வேறு மது வகைகளை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்தோம். நீதிமன்ற உத்தரவுப்படி அதை அழித்துவிட்டோம். ஆனால், அந்த மது வகைகளை ஒருகுழிக்குள் மட்டுமே போட்டு மூடிவிட்டோம். அந்த மது வகைகள்தான் குடிதண்ணீரில் கலந்திருக்கும்" எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, தங்கள் தவறை உணர்ந்த இரிச்சாலக்குடி கலால் வரித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக அந்த 18 குடியிருப்பு வாசிகளுக்கும் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிதண்ணீர் தொட்டியை வாங்கிக் கொடுத்துள்ளனர். மேலும், அந்தக் கிணற்றையும் சுத்தம் செய்யும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர்.

SCROLL FOR NEXT