பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

பிரதமர் மோடிக்குப் பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பிரிவுக்கு பட்ஜெட்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

பிரதமர் மோடிக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கி வரும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவுக்கு (எஸ்.பி.ஜி.) மத்திய பட்ஜெட்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் ரூ.60 கோடி அதிகமாகும்.

பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக மட்டும் சிறப்புப் பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டது.

2003-ல் வாஜ்பாய் தலைமையிலான அரசு, எஸ்.பி.ஜி. பாதுகாப்புக் காலத்தை, அச்சுறுத்தலின் அளவைக் கருத்தில் கொண்டு மாற்றம் செய்யலாம் எனத் திருத்தம் கொண்டு வந்தது.

ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு திரும்பப் பெற்றது. அதற்குப் பதிலாக சிஆர்பிஎப் படைப்பிரிவு அடங்கிய இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேவுகவுடா ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. தற்போது 3000 பேர் கொண்ட எஸ்.பி.ஜி. குழு பிரதமர் நரேந்திர மோடி ஒருவருக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில் 2020-21 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பிரதமர் மோடிக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படைப்பிரிவுக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.540 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-19 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.420 கோடி இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.540 கோடியாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT