சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கடந்த 2017-ல் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்துள்ள அவருக்கு இன்னும் ஓராண்டு தண்டனை மீதம் உள்ளது.
இந்நிலையில் சிறை நன்னடத்தை விதிமுறைகளின்படி அவர் விரைவில் விடுதலை ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கான சட்டரீதியான முயற்சிகள் நடந்துவருவதாக சசிகலா தரப்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
சசிகலா கடந்த 3 ஆண்டுகளில் தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவர் உயிரிழந்த போதும் மட்டும் பரோலில் வெளியே வந்தார். இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய ஆனந்துக்கும், சசிகலாவின் அக்கா வனிதா மணியின் பேத்திக்கும் (பாஸ்கரனின் மகள்) வரும் மார்ச் 5-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதில் சசிகலா கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என இரு குடும்பத்தினரும் விரும்புவதால், அவரை பரோலில் வெளியே அழைத்துவர முடிவெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மன்னார்குடியை சேர்ந்த உறவினர்கள் சிலர் சசிகலாவை சிறையில் சந்தித்து பேசினர். அப்போது திவாகரன் குடும்ப திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இதனால் சசிகலா பரோலில் வெளியே வருவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு தனது வழக்கறிஞர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.