மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலமை மோசமடைந்து வருவது கவலையளிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியினர் மீது திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து 5 உறுப்பினர் கொண்ட பாஜக குழு மேற்கு வங்கம் வந்துள்ளது. குழுவில் உள்ள பாஜக தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறியதாவது: "மேற்கு வங்கத்தில் மாநில அரசே அராஜகத்தை தலைமையேற்று நடத்தி வருகிறது. மம்தாவே இந்த அராஜகத்தை ஆதரிப்பது நாட்டைக் கவலையடையச் செய்துள்ளது. எங்கள் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியது அரசு எந்திரத்தை வெட்கங்கெட்டத் தனமாக அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதையே காண்பிக்கிறது. இடதுசாரிகளின் ஆட்சியில் இருந்ததை விட மாநிலத்தின் நடப்பு ஆட்சியில் அராஜகம் பெருத்து விட்டது" என்றார் அவர்.
காயமடைந்தவர்களின் உறவினர்களைச் சந்தித்த ஐவர் குழு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தங்களது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளனர்.