வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும், புதிதாக வாக்காள அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களும் ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டியது இருக்கும்.
இதற்காக 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான பணிகளை மத்திய சட்ட அமைச்சகம் செய்து வருகிறது. இதற்கான சட்டவரைவு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் முன் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின், அந்த சட்டவரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
வாக்காளர் அடையாள அட்டையோடு, ஆதார் எண்ணையும் இணைக்கும் பட்சத்தில் தனிமனிதர்களின் அந்தரங்கம் பாதுகாக்கப்படும், போலிகள் உருவாவது தடுக்கப்படும்.
இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஆதார் எண்ணுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகளில் அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இது திருத்த மசோதாவாக அறிமுகமாகும் என நினைக்கிறோம்" எனத் தெரிவித்தார்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்தல் ஆணையம் மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு எழுதிய கடிதத்தில், " 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின்படி, வாக்காள் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்பவர்களும், ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும், ஆதார் எண்ணை அளிக்கவும், அதிகாரிகள் ஆதார் எண்ணை அவர்களிடம் இருந்து பெறவும் அனுமதிக்க வேண்டும்.
மேலும், தேர்தல் பதிவாளர் அதிகாரிகள் ஆதார் எண்ணையும் கேட்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும். இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையில் தவறுகள் இன்றியும், ஒரே பெயரில் இருவர் வருவது போன்ற குழப்பங்கள் தவிர்க்கப்படும். போலியாக உருவாக்கம் செய்வது தடுக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் சட்ட அமைச்சகம் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.