குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயே உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் கிரிமினல் பின்புலம் குறித்து மக்களுக்கு ஊடகங்களிலும், நாளேடுகளிலும் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த உத்தரவில், "அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும்போது தங்களின் குற்றப்பின்னணி குறித்து நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டது.
இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிக்கையில், படிவம்-26 ஐ தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. அதன்படி வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்னணி குறித்து அந்தப் படிவத்தில் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தெளிவில்லாமல் இருக்கிறது எனக் கோரி மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அதில், ''வேட்பாளர்கள் தங்கள் குற்றப்பின்னணி குறித்து எந்தெந்த முன்னணி நாளேடுகளில், தொலைக்காட்சிகளில் எத்தனை நாட்களுக்குள் தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என்ற தெளிவான உத்தரவு இல்லை. மேலும், மக்கள் பார்க்கும் ஆர்வம் இல்லாத தொலைக்காட்சிகளிலும், மக்களைச் சென்றடையாத நாளேடுகளிலும் வேட்பாளர்கள் விளம்பரம் செய்து தப்பிக்கிறார்கள். இதற்குரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்எப் நாரிமன், ரவிந்திர பாட் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அடுத்த ஒருவாரத்துக்குள் தேர்தல் ஆணையமும், மனுதாரரும் அமர்ந்து ஆலோசித்து, செயல் திட்டம், விதிமுறைகளை வகுத்து அளிக்க வேண்டும். தேசத்தின் நலனுக்காக, அரசியலில் குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில் இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் கூறுகையில், "அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. அவர்களின் குற்றப் பின்னணி குறித்து ஊடகங்களில் விளம்பரம் செய்தால் மட்டும் அரசியலில் கிரிமினல்கள் ஆதிக்கம் இருப்பது குறைந்துவிடாது" எனத் தெரிவிக்கப்பட்டது.