பாதுகாப்புப் படையினரால் தாம் துன்புறுத்தப்படுவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, மெகபூபா முப்தியின் மகளான இல்டிஜா முப்தியும் காஷ்மீர் பள்ளத்தாக்கை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இல்டிஜா முப்தி நேற்று கூறியிருப்பதாவது:
சிறப்பு பாதுகாப்புப் படையினரால் (எஸ்எஸ்ஜி) நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். எஸ்எஸ்ஜி படையினர் மட்டுமின்றி ஐ.பி. உளவுத் துறை, சிஐடி போலீஸார் ஆகியோர் என்னை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாதுகாப்பு என்ற பெயரில் எனது சுதந்திரத்துக்கான உரிமை பறிக்கப்படக் கூடாது.
நாட்டில் பல தீவிரமான பிரச்சினைகள் நிலவி வருகின்றன. அதில் மத்திய உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு பதிலாக, என்னைப் போன்றவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் விவகாரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். - பிடிஐ