பாகிஸ்தானில் பிறந்தவர் நீத்தா கன்வார். 36 வயதான இவர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்து உயர்கல்வி பயின்றார். பின்னர் ராஜஸ்தானைச் சேர்ந்தவரை திருமணம் செய்து இங்கேயே குடியேறினார். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியக் குடியுரிமை கிடைத்தது.
இந்நிலையில் ராஜஸ்தானில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் டோங்க் மாவட்டம் நட்வாடா கிராம பஞ்சாயத்தில் தலைவர் பதவிக்காக போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் இவர் தனக்கு அடுத்து வந்த வேட்பாளர் சோனு தேவியைவிட 362 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் மொத்தம் 7 பெண்கள் போட்டியிட்டனர். பதிவான 2,494 வாக்குகளில் மொத்தம் 1,073 வாக்குகளைப் பெற்று நீத்தா கன்வார் வெற்றி கண்டார்.
2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நீத்தா, இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் நட்வாரா பகுதியைச் சேர்ந்த புன்யா பிரதாப் கரண் என்பவரை 2011-ல் திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து நீத்தா கன்வார் கூறும்போது, “என்னை வெற்றி பெறச் செய்த இந்த கிராமத்து மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பஞ்சாயத்துத் தலைவராக நேர்மையாகவும், நியாயமாகவும் இந்த மக்களுக்கு சேவை செய்வேன். பஞ்சாயத்து வளர்ச்சிக்காக பாடுபடுவேன்” என்றார்.